இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு

பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ

2/24/2009

கை விரல்களில் ஒன்பதாம் வாய்பாடு

இரு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளுங்கள் .
உள்ளங்கைகள் வானம் பார்த்து இருக்கட்டும் .
ஒன்றையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள
நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் பெரு விரலை ( அதாவது முதல் விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் ஒன்பது . அது தான் விடை .
இரண்டையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள
நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் ஆள்காட்டி விரலை மட்டும் ( அதாவது இரண்டாவது விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் .......மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்கள் ஒன்று , அந்த பக்கம் இருக்கும் விரல்கள் எட்டு . இரண்டையும் அருகருகே எழுதினால் பதினெட்டு . அது தான் விடை .

மூன்றையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் நடுவிரலை மட்டும் ( அதாவது மூன்றாவது விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் .......மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்கள் இரண்டு , அந்த பக்கம் இருக்கும் விரல்கள் ஏழு . இரண்டையும் அருகருகே எழுதினால் இருபத்து ஏழு . அது தான் விடை .

நான்கையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு நாலாவது விரலை மடக்கி ...... மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்களையும் , அந்த பக்கம் இருக்கும் விரல்களையும் அருகருகே எழுதினால் முப்பத்து ஆறு . அது தான் விடை .

இப்படியே .....ஐந்தையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு ஐந்தாவது விரலை யும்
.... ஆறையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு ஆறாவது விரலை யும் மடக்கி ... மீதி இருக்கும் விரல்களைக் கொண்டு விடை அறியலாம் .

ஆனால் கை விரல்களைக் கொண்டு பத்து தடவை மட்டுமே பெருக்க முடியும் .
அதற்கு மேல் பெருக்க ........ ?

இருக்கவே இருக்கிறது கால் விரல்கள்.

..... பிரியங்களுடன் ...பி. ஜி. கதிரவன்

2/16/2009

நான் கடவுள் - விமர்சனம்

மூன்றாண்டு காலம் எடுக்கப்பட்டு ...
மூச்சு திணற வைக்கிற பிரச்சினைகளை க்கடந்து வருகிற படம் என்பதால் இயல்பாகவே படம் பார்க்கிற ஆர்வம் அதிகமிருந்தது .
தொலைக்காட்சிகளில் முன்னோட்டங்கள் காட்டப்பட்ட போதே தெரிந்து விட்டது
படம் தீவிர போக்கு கொண்ட படமாக இருக்கும் என்று .
நினைத்த படியே , ருத்ரனையும் , தாண்டவனையும் பற்றிய
ருத்ர தாண்டவ படம் இது .


முதல் காட்சியிலேயே நாமும் காசியில் இருப்பது போல ஒரு ஐக்கிய உணர்வு
உருவாக செய்து விடுவது இணைந்திருக்கிற கலைஞர்களின் வலிமை .
பழைய பாடல்களின் பால் பாலாவிற்கு இருக்கிற ஈர்ப்பு "பிதா மகனை " த்தொடர்ந்து இதிலும் வெளிப்பட்டிருக்கிறது .


பொதுவாக பாலாவின் படங்களில் கதாநாயகனுக்கும் , கதா நாயகிக்கும் "டூயட் "
இருந்ததே கிடையாது .
என்றாலும் இருவரும் சந்திப்பார்கள் , யாராவது ஒருவர் காதல் உணர்வு கை வரப் பெறுவார்கள் .
இதில் அதற்கும் வாய்ப்பு இல்லை .


பதினான்கு வருடங்களுக்கு முன்னால் காசியில் கை விட்டு வந்த மகனை , அவன் வளர்ந்து ,
"இறந்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு " மோட்சமும் மறுபிறவியில் இருந்து விடுதலையும் தருகிற "அகோரி " ஆனபிறகு , சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தந்தை .
அவன் இங்கு வந்து ,உறவுகளில் இருந்து ஒதுங்கி ,கஞ்சா புகைத்தபடி , வாழ தகுதி இல்லாத இருவருக்கும் , வாழ விரும்பாத கதா நாயகிக்கும் " உயிர் விடுதலை " தந்து விட்டு மறுபடியும் காசிக்கே திரும்பி விடுவது தான் கதை .


" நான் கடவுள் " என்கிற தலைப்பை பார்த்தவுடன்
"கடவுள் என்பவர் வெளியில் வேறெங்கேயோ இல்லை . தனக்குள் தான் இருக்கிறார் " என்பதை ஒவ்வொரு மனிதனும்உணரும் விதத்தில் எடுக்கப் பட்ட படமாக இருக்கும் என நினைத்து படம் பார்க்கப் போனால் ஏமாற்றேமே உங்களை எதிர் கொண்டழைத்து வரவேற்று உபசரிக்கும் .
இது.........." தானே கடவுள் "என்று நினைக்கிற ஒரு தனி மனிதனின் கதை .


படத்தில் கடவுளாக தன்னை உணருகிற , பாவிக்கிற , ஆர்யாவுக்கான வசனங்களை ஒரு வெள்ளைத்தாளில் அரைப் பக்கத்தில் எழுதி விடலாம் .
பெரும்பாலும் காட்சிகளாலேயே ரசிகர்கள் வழி நடத்த படுகிறார்கள் .
ஆர்யா குளிக்கிற காட்சிகள் உண்டு ; புகைக்கிற காட்சிகள் உண்டு ; உணவருந்துகிற காட்சிகள் மட்டும் இல்லையே ............ஏன்..? என்று யோசித்தேன் . பிறகு தான் தெரிந்தது . "அகோரிகள் " மனித மாமிசம் சாப்பிடுகிறவர் என்று . படத்தில் ஆர்யா ஒரு அகோரி . எனவே , அவர் சாப்பிடும் காட்சிகளை சென்சாரின் நாக்குகள் சாப்பிட்டு இருக்கலாம் .
இன்னொரு முக்கியமான விஷயம் .
நாம் இப்போது சன் டிவி யுகத்தில் வாழ்கிறோம் .
இந்த யுகத்தில் ஒரு படம் வெற்றி பெற அதன் பாடல்களை தினந்தோறும் இருபது முறை தொலைக் காட்சியில் காட்ட வேண்டும் .
நகைச்சுவை காட்சிகளை மறுபடி மறுபடி போட்டு காட்டி கொண்டே இருக்க வேண்டும் .
நான் கடவுள் படத்திற்கு இந்த இரண்டையுமே செய்வது இயலாது .
இருக்கிற " மாதா உன் கோவிலில் ..." பாடலையும் ஆப்பரேட்டர்கள்அவர்களாகவே வெட்டி தள்ளி விடுகிறார்கள் .
எனவே இந்த படம் பிரமாண்ட வெற்றியை (?) அடைவது சந்தேகமே .


இந்த படத்தில் ஒரு நெருடலான விஷயம் என்னவென்றால் , ஆர்யா ...... வாழ தகுதி இல்லாத இருவரை மட்டுமே , அதுவும் அவர்களாக தேடி வந்து வம்பிழுத்த பிறகே அழிக்கிறார் . மீதி .... ? கடவுளுக்கே வெளிச்சம் .


பாலாவின் முயற்சி புதிதாக இருந்தாலும் ஒரு முழு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படாதது இந்த படத்தின் குறைபாடே என்பது என் தனிப்பட்ட கருத்து .

2/15/2009

செய்ய வேண்டியது

கடலை இறைத்து

காய வைக்கும் கனவுகளோடு

கரையிலேயே நின்றிருக்கும்

என் சக இளைஞர்களே ....

படகுகள் செய்ய பழகிக் கொண்டால்

பயணமும் செய்யலாம் .

பசியும் தணிக்கலாம் .

பிறகு ... கடலும் உங்களுக்காக வற்றும்.

பூமியும் உங்களையே சுற்றும்.

.....பி. ஜி. கதிரவன்

இயல்பு

நாட்டாமை பதவியை
நாய்களுக்கு கொடுத்தால்
கண்ட இடங்களில்
காலைத் தூக்கத் தானே செய்யும் .

...பி.ஜி.கதிரவன் .

ஹைக்கூ

விபத்துக்குள்ளானது ஒரு சைக்கிள் .
பலியானதோ நூறு உயிர்கள் .
கூடை நிறைய கோழி குஞ்சுகள் .
....பி. ஜி. கதிரவன் .

இலக்கு

குளத்தில்
மீன் இல்லாமல் போகலாம் .
ஒருவேளை
நீர் இல்லாமலும் போகலாம் .
ஆனாலும்
குளக்கரையின் தூண்டில்கள்
எப்போதும்
நம்முடையவைகளாக இருக்க வேண்டும் .
...... பி . ஜி. கதிரவன்

ஹைக்கூ

அனுமதி தந்தும் உள்ளே வராமல்

கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறது .

காற்று .

........ பி . ஜி . கதிரவன்

இனிய நண்பர்களே ...
கதிரவனின் கை கூப்பல்கள் .
மிக சமீபத்தில் தான் நான் இணைய தளங்களில் மேயப் பழகினேன் .
குறிப்பாக எழுத்தாளர் ராம கிருஷ்ணனின் இணையதளத்திற்கு சென்று அவரின் எழுத்துக்களை மிக ஆர்வமாக வாசித்தேன் .
பற்றுக்கொடி கிடைத்த பின் படர்கொடி சும்மா இருப்பதில்லையே ..
அது போல
வேறு இணைய தளங்கள் உண்டா என தேடி அலைந்து
அம்பலம் , கிறுக்கல் , வீணாப்போனவன் , ரசனைக்காரன் , என
இணைய தளங்களில் என் மேய்ச்சல் பரவலானது.
கல்லூரி ஆசிரியனாக பணியாற்றி வந்தாலும் ,
வணிகவியல் துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும்
படைப்பு இலக்கியங்களின் பால் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன் .
கல்லூரியில் இளங்கலை வணிக வியல் படிக்கிற காலத்திலேயே
" இளைய ரோஜா " என்ற மாத இதழை அச்சில் வெளியிட்டு வந்தேன் .
பிறகு வானொலியில் கவிதைகள் வாசிக்கவும் , செயற்கைக்கோள் தொலைக் காட்சிகளின் பேச்சரங்கங்களில் பங்கு பெறவும் துவங்கினேன் .
பிறகு கவிதை புத்தகங்கள் வெளியிட , தொகுப்பு நூல்கள் வெளியிட துவங்கினேன் .
சொந்த பதிப்பகம் வாயிலாக பாட புத்தங்களும் வெளியிட ஆரம்பித்தேன் .
திரைப்படம் என்பது என்னை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய வகுப்பறை .
அந்த வகுப்பறையில் ஆசிரியப்பணி கிடைக்குமா என அலைந்து கொண்டிருக்கிறேன் .
அதற்காக " என்ன ராசா செய்தாய் ?" என்று கேட்டால்
" கீதையை பின்பற்றுகிறேன் " என்பதே என் பதிலாக இருக்கும் .
புரியவில்லையா..?
கீதை சொல்கிறது .
" நீ எதை நினைக்கிறாயோ ... அதுவாகவே மாறி விடுகிறாய் ."
நான் திரைத்துறையில் நுழைய வேண்டு மென்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் .
நுழைந்த பின் பயன் படுத்துவதற்கு நிறைய சரக்குகள் சேமித்து வைத்து இருக்கிறேன் .
இதுவே நான் .
இந்த சூழ்நிலையில் நமக்கென ஒரு இணைய தளம் துவக்கினால் என்ன என்று தோன்றியது .
அப்போது தான் கிறுக்கல் வாயிலாக இலவசமாக வலைப்பூ துவங்க வாய்ப்பு இருப்பது தெரிந்து
இங்கு வந்து சேர்ந்தேன்.
இந்த பக்கங்களில் நான் எழுதியிருப்பவை எல்லாம் வலைப்பூ எப்படி செயல் படுகிறது
என தெரிந்து கொள்ள நான் எழுதிய சுய விவரங்கள் .
இனி என் படைப்புக்கள் வரிசையாக வலம் வரத்துவங்கும் .
நன்றி . கதிரவன் .பி .ஜி

பின்பற்றுபவர்கள்