இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு

கைவசம்

பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ

10/27/2009

காலம்


பூமியைக் காட்டி

சோறு ஊட்டுவார்களோ...?

நிலவில் குடியேறும்

குழந்தைக்கு .

காட்டி சோறு ஊட்ட

பூமி இருக்குமா ... ?

8/24/2009

தலைமுறை

மாலை நேரம் .
ஓய்வாகவும் , தளர்வாகவும் அமர்ந்திருந்தேன் .
துணைக்கு தேநீர் இருந்தது .
வரப்போகும் மகனுக்காக மாலை நேர டிபன் தயாரிப்பில் இருந்தாள் மனைவி .
"தொம் " என என் முன்னால் புத்தகப்பை வந்து விழுந்தது .
நிமிர்ந்து பார்த்தேன் .
ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகன் ஹரி .
" என்னடா ஹரி ...? "
" அப்பா ... நாளையில இருந்து நீ வேலைக்கு போக வேணாம் . வேலையை விட்டுரு ... "
கேள்விக்குறிகள் தொங்கும் கண்களுடன் கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்தாள் மனைவி .
" ஏண்டாஅப்படி சொல்ற ..? என்ன நடந்துச்சு ..? "
" உன்னால தினம் தினம் எனக்கு கெட்ட பேரு ...."
" என்ன கெட்ட பேரு .. "
" எங்க மிஸ் எதுக்கெடுத்தாலும் ' ஒரு புரபசரோட பையனா இருந்துக்கிட்டு இவ்வளவு மக்கா இருக்கியே ... ' ' ஒரு புரபசரோட மகனா இருந்துக்கிட்டு இவ்வளவு சேட்டை பண்ணுறியே ' ன்னு திட்டிக்கிட்டே இருக்காங்க . நீ புரபசரா இருக்கிறதுனால தான் இவ்வளவு பிரச்சனை . அதனால நீ இந்த புரபசர் வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போ .. என்னால திட்டு வாங்க முடியல ... "
கிச்சனிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது .

6/15/2009

இது பிரபாகரனாய் இல்லாமலிருக்கக் கடவது .


மே 17 ந்தேதி தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி வந்ததில் இருந்து .... இன்று ஜூன் 17 ந்தேதி வரை ...... தினந்தோறும் வார , மாத ,இதழ்களிலும் இணைய தளங்களிலும் ... பிரபாகரன் பற்றிய செய்திகளை தேடி தேடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன் .

இது தான் பிரபாகரனின் உடல் என்று சிங்கள இராணுவம் வெளியிட்ட படங்களை உற்று உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .

நேற்று வரை புலிச்சாயம் பூசியிருந்த " புதினம் " இன்று சிங்கச்சாயம் பூச புறப்படுவதை பார்க்கிறேன் .

"இந்து " " தினமலர்" நாளிதழ்கள் தாங்களே புதைகுழி தோண்டி புலித்தலைவரை புதைத்து விட்டு வந்தது போல் பூரிப்பதை காண்கிறேன் .

ஆனான பட்ட " ஆனந்த விகடனும் " 'உண்டு ' 'இல்லை ' என எதுவும் சொல்லாமல் ஊமையாய் இருப்பதை உணர்கிறேன் .

"சிறுத்தைகள் " புலியாய் மாற முயற்சிப்பதையும் சுவரொட்டிகள் எனக்குசுட்டிக் காட்டுகின்றன .

" நெருப்பு " இணைய தளம் கங்குகளாய் வார்த்தைகளை கக்குவதையும் காண்கிறேன் .

வலி சுமந்த வர்க்கத்தினருக்கு வார்த்தைகள் தர முடியாத வருடலை " நக்கீரன் " வடிவமைத்த ஒரு புகைப்படம் தந்ததை புரிந்து கொள்கிறேன் .

அச்சு , ஒலி , காணொளி , என எல்லா வடிவ ஊடகங்களிலும் பிணங்களாய் ஆக்கப்பட்ட தமிழர்களை அறிய நேர்கிறேன் .

என்னால் செய்ய முடிவது எது என வெகு நேரம் யோசிக்கிறேன் .

சக தமிழனைப் போல சலனமற்று இருப்பதல்ல இதற்கு தீர்வு என்பது மட்டும் புலப்படுகிறது .

வலைப்பூவில் இதை வார்த்தைகளாய் இறக்கி வைப்பது என்னைப்போல் என்ன செய்வது என்று இதயம் பிசைகிற இளைஞர்களை இணைத்து ஒரே இதயமாய் உருவாக்க முடியுமா என்று ஒரு முயற்சி செய்யத்தான் .

3/21/2009

இலக்கியமாகும் வாழ்க்கை


நான்
தமிழ் இலக்கியம் படித்தவனில்லை .
ஆனாலும்
ஒவ்வொரு மாதமும்
குறுந்தொகையைப் பார்க்கிறேன் .
என் சம்பள வடிவில் .

மிகப் பெரியது




யாசகம் கேட்கிறது யானை .
பயமுறுத்தினால்
இதை விட
அதிகமாக கிடைக்கும் எனத்தெரிந்தும் .







3/16/2009

மின் புத்தகமாக சிற்றிதழ்கள்

பல ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த தமிழ் சிற்றிதழ்கள் மின் புத்தக வடிவில் கிடைக்கின்றன . இலவசமாக பதிவிறக்கம் செய்ய ....

http://www.thamizham.net

3/13/2009

கையறு நிலை

போன மாதத்தை விட இந்த மாதம் அரிசி விலை கிலோவுக்கு நாலு ரூபாய் ஏறி விட்டது .

போன மாதத்தை விட இந்த மாதம் எண்ணை விலை லிட்டருக்கு பத்து ரூபாய் ஏறி விட்டது .

போன மாதத்தை விட இந்த மாதம் சோப்பு விலை இரண்டு ரூபாய் ஏறி விட்டது .

போன மாதத்தை விட ......

ம் ச் ... என்ன சொல்ல .... ?

பேசாமல் போன மாதத்திலேயே இருந்திருக்கலாம் .

இப்படித்தான் போன மாதமும் நினைத்தேன் .

பின்பற்றுபவர்கள்