
மே 17 ந்தேதி தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி வந்ததில் இருந்து .... இன்று ஜூன் 17 ந்தேதி வரை ...... தினந்தோறும் வார , மாத ,இதழ்களிலும் இணைய தளங்களிலும் ... பிரபாகரன் பற்றிய செய்திகளை தேடி தேடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன் .
இது தான் பிரபாகரனின் உடல் என்று சிங்கள இராணுவம் வெளியிட்ட படங்களை உற்று உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .
நேற்று வரை புலிச்சாயம் பூசியிருந்த " புதினம் " இன்று சிங்கச்சாயம் பூச புறப்படுவதை பார்க்கிறேன் .
"இந்து " " தினமலர்" நாளிதழ்கள் தாங்களே புதைகுழி தோண்டி புலித்தலைவரை புதைத்து விட்டு வந்தது போல் பூரிப்பதை காண்கிறேன் .
ஆனான பட்ட " ஆனந்த விகடனும் " 'உண்டு ' 'இல்லை ' என எதுவும் சொல்லாமல் ஊமையாய் இருப்பதை உணர்கிறேன் .
"சிறுத்தைகள் " புலியாய் மாற முயற்சிப்பதையும் சுவரொட்டிகள் எனக்குசுட்டிக் காட்டுகின்றன .
" நெருப்பு " இணைய தளம் கங்குகளாய் வார்த்தைகளை கக்குவதையும் காண்கிறேன் .
வலி சுமந்த வர்க்கத்தினருக்கு வார்த்தைகள் தர முடியாத வருடலை " நக்கீரன் " வடிவமைத்த ஒரு புகைப்படம் தந்ததை புரிந்து கொள்கிறேன் .
அச்சு , ஒலி , காணொளி , என எல்லா வடிவ ஊடகங்களிலும் பிணங்களாய் ஆக்கப்பட்ட தமிழர்களை அறிய நேர்கிறேன் .
என்னால் செய்ய முடிவது எது என வெகு நேரம் யோசிக்கிறேன் .
சக தமிழனைப் போல சலனமற்று இருப்பதல்ல இதற்கு தீர்வு என்பது மட்டும் புலப்படுகிறது .
வலைப்பூவில் இதை வார்த்தைகளாய் இறக்கி வைப்பது என்னைப்போல் என்ன செய்வது என்று இதயம் பிசைகிற இளைஞர்களை இணைத்து ஒரே இதயமாய் உருவாக்க முடியுமா என்று ஒரு முயற்சி செய்யத்தான் .
